சினிமாவை எல்லோருக்கும் தெரியும். ஆனால் சினிமாவைப் பற்றி எல்லோருக்கும் தெரியாது. அது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய மிக வலிமையான தொடர்பாடல் ஊடகம். மற்ற எந்த இலத்திரனியல் ஊடகத்தையும் விட சக்தி வாய்ந்தது.
அது மிகச் சிறந்த பொழுதுபோக்கி மட்டுமல்ல; வெகுசன அபிப்பிராயங்களை உருவாக்ககூடிய அல்லது திணிக்கக்கூடிய ஒரு ஊடகம். அதன் வீச்சினை அல்லது அதன் மூலம் பெறக்கூடிய நன்மையின் அளவினை நாம் குறைத்துத்தான் மதிப்பிட்டிருக்கிறோம்.
மற்றக் கலைகளை விட சினிமா மனிதனின் அனைத்து புலன்களையும் தூண்டி ஒரு செய்தியின் தாக்கத்தினை முழுமையான அளவில் உணர வைக்கும். நிஜ வாழ்வில் கூட உணரத்தவறும் சில உணர்வுகளை சிறப்பாக உணரவைப்பதில் சினிமா கைதேர்ந்தது. ஒரு சோகமான தருணத்தில் யாரும் நம் பின்னால் நின்றுகொண்டு சோக கீதம் படிப்பதில்லை. காதலை காதலி ஏற்றுக் கொள்ளும்போது லாலாலா... கோரசுடன் பட்டாம்பூச்சிகள் பறப்பதில்லை. இருட்டில் தனியே
வீடு திரும்பும்போது எதுவித பயங்கர பின்னணி இசை ஒலிப்பதில்லை.
எந்த ஒரு சிறப்பான கதையிலும் காட்சி விபரிப்பு அவ்வளவு சிறப்பாக முழுமையாக வாசகனை சென்றடைவதில்லை. ஒரு எழுத்தாளனின் கதையில் வரும் மாந்தர்களினை
சூழலை அல்லது பின்னணியை வாசகன் தான் இதுவரை பெற்ற அறிவு மற்றும் அனுபவத்தின் ஊடாகவே கற்பனை செய்துகொள்கிறான்.எழுத்தாளனின் மொழிநடை, சொற்கள்
ஆகியன வாசகனுக்கு புரியாமல் போகலாம். ஆனால் சினிமாவில் இயக்குனர் தான் உணர்ந்ததை அல்லது காட்ட விரும்புவதை கிட்டத்தட்ட முழுமையாக உணர்த்திவிடலாம்.
அத்துடன் தற்போதைய விஞ்ஞான தொழிநுட்பத்தின் மூலம் தகவலை உணர்த்தும் கலைக்கு வரையறைகளே இல்லாமல் போய்விட்டது எனலாம். நீங்கள் எதை வேண்டுமானாலும் பார்க்கலாம். மனித உணர்வுகளின் நுணுக்கங்கள்,ஆவிகளின் நடமாட்டங்கள்,
மந்திரவாதிகளின் மந்திரக்கோல்கள், மற்றவரின் கனவுகள்,விண்வெளியில் வாழும் வேற்றுக்கிரகவாசிகள் இன்னும் சொல்லப்போனால் இறந்த காலம்,எதிர்காலம் என அனைத்தையுமே காணலாம்.
கற்பனைகளை காட்சிகளாய் காணமுடிவது சினிமாவில்தான்.
ஆனால் இங்கே சினிமா என்றால் கிட்டத்தட்ட ஒரு கெட்ட சொல் போல பார்க்கப்படுகிறது. நான் கத்தியும் சினிமாவும்
ஒன்றென்பேன். அதை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் அது நல்லதா கெட்டதா என்பது அடங்கியிருக்கிறது. ஓர் ஆளைக் குத்தி கொலையும் செய்யலாம் அல்லது அந்தாலயுக்கு மரக்கறி
வெட்டி சமையலும் செய்யலாம்.
சினிமாவில் இரண்டு பகுதியினர் உள்ளனர். சினிமா தயாரிப்பவர்கள் மற்றும் சினிமா பார்ப்பவர்கள். இவ்விருவரின் செயற்பாடும் சரியாக இருக்கவேண்டும். முதலாமவர்கள் சினிமாவை காசு சம்பாதிக்கும் தொழிலாக பாவிக்க நினைத்தால் நீலப்படம் எடுக்கலாம். இரண்டாமவர்கள் சினிமா தரும் கற்பனை உலகிலேயே லயித்து நிஜ உலகை மறந்து அல்லது அதனை கெடுத்துக் கொண்டு வாழலாம். இந்த இரண்டு பேரின் மனிதப் பலவீனத்தினால் உண்டான தவறுகளுக்காக எடிசன் கண்டுபிடித்த விஞ்ஞான அற்புதத்தை குறை சொன்னால் எப்படி?
சரி, சினிமா எப்படி இவ்வளவு பேரை கவர்கின்றது? மனிதன் ஒரு கதை விரும்பி. மனிதன் பூமியில் பிறந்தது முதல் கதை சொல்வதிலும் கேட்பதிலும் அவனுக்கு ஈடுபாடு அதிகம்.உரை அல்லது கட்டுரை வடிவம்வருவதற்கு முன்பு கதைகள் மூலமே மக்களுக்கு
ஒழுக்கங்கள் கற்பிக்கப்பட்டன.கதைகள் சொல்லியே இறைதூதர்கள் மதங்களை உருவாக்கினார்கள். அதற்கு கிறிஸ்தவ மதத்தின் ஸ்தாபகர்
சரியான உதாரணம். கதையின் பிரமாண்ட வடிவங்களே புராணங்கள், காப்பியங்கள் போன்றன. எவனும் அறிவுரை சொன்னால் கேட்கமாட்டான். கதை சொன்னால் இருந்து கேட்பான். அதனால் கதைகள் ஊடாக அறிவுரை சொன்னார்கள்.
பின் கதைகள் கூத்தாக நாடகமாக இசை சேர்த்து கூறப்பட்டது. இப்போது கதை சொல்பவர்களுக்கு தன் கதையின் முழுமையையும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் கூறுவதற்கு சினிமா வந்துவிட்டது.
நம்மவர்கள் சினிமாவை கலைப்படங்கள், வர்த்தகப்படங்கள் எனப் பிரிப்பார்கள். அது தவறு. எந்த ஒரு வர்த்தகப் படமும்
நான்கு சண்டை மற்றும் பாடல்கள் இருந்தால் மட்டும் ஓடிவிடாது. அதுபோல மிக மெதுவாக nakarkinra கதையும் கதையில் உண்மையின்மையும் அதனை அழகாக வெளிப்படுத்தாத தன்மையும்
கொண்டிருந்தால் எந்த ஒரு கலைப்படமும் பாராட்டுப் பெறாது. சினிமா என்பது மக்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டுமாயின் அது அவர்களை எந்த விதத்திலாவது பாதிக்க வேண்டும். கதை
அவர்களது சொந்த வாழ்க்கையில் நடப்பது போன்று இருக்கலாம் அல்லது நடக்கவேண்டும் என ஆசைப்பட்டது போல இருக்கலாம். அப்போதுதான் அது அவர்களுக்குப் பிடிக்கும்.
மனிதனுக்கு பலவிதமான உளவியல் தேவைகள் இருக்கின்றன. அவனது உணர்ச்சிகளுக்கு வடிகால்கள் வேண்டும். அவனுக்கு உணர்ச்சியை வெளிப்படுத்தியே ஆகவேண்டும். அவன் அழவேண்டும். சிரிக்கவேண்டும். கோபப்பட வேண்டும். பயப்பட வேண்டும். காமுறவேண்டும். இல்லாவிடில் பைத்தியம் பிடித்துவிடும். உணர்ச்சிகளை உணர்ச்சிகளை காட்டாமல் அடக்கியே வைத்திருப்பவர்களுக்கு அது எக்குத்தப்பான இடத்தில் வெளிப்பட்டுவிடும்.
நிஜ சமுதாயத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் மிகுந்த கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எங்கே சிரிக்க வேண்டும்; எங்கே அழ வேண்டும்;யார்மீது கோபத்தை காட்ட வேண்டும்; யார்மீது காமுற வேண்டும் என ஆயிரத்தெட்டு வரைமுறைகள். அது அவனது மனத்திற்கு தெரியும். ஆனால் உடல் அறியாது. பசி வந்தால் அது பசித்தே ஆகும். இயற்கை அழைத்தால் போகாமல் இருக்க முடியுமா?
ஒரு சினிமாவைப் பார்க்கும்போது அயலவனுக்கு சேதமில்லாமல் இவற்றிற்கு தீர்வு கிடைத்துவிடுகிறது. நல்லவர்களுக்கு தீங்கு நேர்ந்தாலும் பிற்பகுதியில் கேட்டவர்கள் அழியவேண்டும். என்பது
எல்லோரதும் அவா. அது சினிமாவில் நடக்கிறது. ரஜினி, எம். ஜி.ஆர் படங்கள் ஜெயிக்கின்றன. தாங்க பட்ட வாழ்க்கைத் துன்பங்களை. சிவாஜி, கமல் போன்றோர் வெளிப்படுத்துகையில் அச்சினிமாவுடன் அவர்கள் ஒன்றிப் போய்விட முடிகிறது. வானத்தில் பறக்க வேண்டும், நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் போன்ற சாகச ஆசைகள் சினிமாவில் நாம் விரும்பும் ஹீரோவினால் அல்லது கதையினால் தீர்க்கப்படுகின்றன.
பொதுவாக இன்னொரு குற்றச்சாட்டும் உண்டு. ஆங்கிலப் படங்கள் போன்ற பிறமொழிப் படங்களுடன் தமிழ்ப்படங்களை ஒப்பிட்டு அவை போல இல்லை என்பார்கள். அப்படி இருக்கக் கூடாது என்பதுதான் சரியானது. ஆங்கிலப் படங்கள் போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் படத்தில் தமிழர்கள் ஆங்கிலம் அல்லவே பேசவேண்டும்? பிற மொழி அல்லது ஆங்கிலப் படங்களில் தங்கள் கலாச்சாரம், பண்பாடு, தனித்தன்மை இவற்றை வெளிப்படுத்தித்தான் எடுப்பார்கள். அப்படித்தான் எடுக்க வேண்டும். எடுக்கவும் முடியும். அப்போதுதான் அது உண்மைக்கு நெருக்கமாக இருக்க முடியும். நம்பலாம். அவர்களது ஏழை அல்லது மத்தியதர வர்க்கத்தினர் கார் வைத்திருப்பார்கள். யாரெவர் என்ற பாகுபாடில்லாமல் மிகச் சாதரணமாக உதட்டுடன் உதடு முத்தமிட்டுக் கொள்வார்கள். இதெல்லாம் நம்மவர்கள் செய்தால் ஒத்துக் கொள்ள முடியுமா?
ஆனால் ஆங்கிலப் படத்துக்கு நிகரான தொழிநுட்பம் மற்றும் கதைகளின் பன்முகத்தன்மை நம் தமிழ் படங்களில் இல்லை என்றால் ஏற்றுக் கொள்ளலாம். நாம் கதை சொல்வதற்கு ஏராளமான கருப்பொருட்கள் உலகில் விரவிக் கிடக்கின்றன. காதல், துரோகம் போன்ற ஒரு சிலவற்றுக்குள் முடங்கிக் கிடப்பதுதான் தமிழ்ச் சினிமாவின் குறைபாடு.